Friday, June 25, 2010

ராவணன்! மணிரத்னத்தின் வன வாசம்!













பல வருடங்களுக்கு பின் மணிரத்னம் வருகிறார் என்ற எதிர்பார்ப்புடன்      இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன். வனத்திற்குள் வாசம் செய்து படம் முழுக்க முடித்து விடுகிறார். திரைப்படக் கலையின் தொழில் சிறப்பை ஆயுதமாக வைத்து தன் படைப்பின் ப்ரமிப்பை ரசிகர்களுக்குக் கொடுத்தாலும் கதைக்களம் சாதாரணமான ஒன்று என்ற வகையில்  இம்முயற்சியின் பரிமளிப்பு கொஞ்சம் சோடை போவது போல் ஒரு உணர்வு.

 ஒரு பார்வையாளனாக படத்தின் ஆரம்பத்தில் காட்சி கோர்ப்புகளை உள்வாங்கி ஒருங்கிணைக்க சற்று சிரமமாக இருந்தது.

காட்சிகள், காட்சியமைப்பின் கடின உழைப்பு, படப்பிடிப்பு நடத்திய இடங்கள், நேரம், ஒளி ஓவியர்களின் திறம், மற்ற கலைஞர்களின் ஒத்துழைப்பு என்று, ராவணன் ஒரு தரமான முயற்சியைத் தருவதை நான் உணர்ந்தாலும்,  ஒரு இயக்குனர் என்ற முறையில் மணி அவர்கள் ஏன் இந்தக் கதையில் நாட்டம் கொண்டார் என்று அலச முயன்ற போது, ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது.

திரையுலகில் இயக்குனர்களாய் பவணி வந்து கொண்டு இருக்கும் பலரின் மனதிலும் ஏற்படக்கூடிய போலிஸ் அராஜகம் என்ற சிந்தனைதான் ராவணனின் மூலக்கரு. வியாபார அடிப்படையில் மணிரத்னத்தின் முந்தைய படங்கள் ஏமாற்றம் அளித்த்து என்ற பின்ணணியில் ராவணனின் வெற்றிக்கு ஏற்படுத்தப்பட்ட யுக்தியாய் கதையின் பாங்கு தோன்றியது.

வீராவாக வரும் விக்ரம் எப்படி ராவணனாக இயக்குனரின் பார்வையில் வருகிறார் என்று எண்ணினால் எஸ்.பி யாக வரும் ப்ருத்வி ராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயைக் கடத்தி அவரின் அழகில் மயங்கும் ஒரு பாத்திரமாக விக்ரம் புணைக்கப்பட்ட விதம் என்ற அடிப்படைதான்.

14 வருட வனவாசம் என்ற ராமாயணம். 14 நாட்கள் (Miniature Version) சிறை பட்டிருந்த நமது சீதாவாக ஐஸ்வர்யா. ப்ருத்விராஜ் ராமன் வேஷத்திற்கு பொருத்தமானவர் ஆனால் ஒரு போலிஸ் அதிகாரியாக ராமனின் குணநலம் மற்றும் மணுதர்மம் இல்லாதவராய் இருந்தார். மணி ரத்ணம் அந்த சில நல்ல குணங்களில் சிறிதை ராவணனாய் வரும் விக்ரமிற்கு கொடுத்து விட்டார்.

அழகின் சபலம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற ஒரு கண்ணோட்டத்தை,  பலதரப்பட்ட சொல், செயல் தர்மங்களை காக்கும் கதா நாயகனான விக்ரமிற்கு, ஒரு மணமான பெண்ணிடம் வருவது 21 ஆம் நூற்றாண்டின் விதி விலக்கா என்று கேட்கத் தோன்றுகிறது.  விக்ரமிற்கு வரும் அந்தக் காதலை மிகவும் அதிகம் காட்டி மக்களிடமோ, குறிப்பாக பெண்களிடமோ வம்பை விலைக்கு வாங்கி அதில் ஏதேனும் தடங்கல் செய்யவே சில கூட்டம் அலையும் என்ற ஐயம் மணி அவர்களைக் கொஞ்சம் ஜஹா வாங்க வைத்தது போலவும் அவர் மந்திரி சபையின்  வியாபார நோக்குமாகவும் வியூகமாகவும் தெரிகிறது.


 சில நாட்களே நடக்கும் இந்த கதைக்களத்தில் சில இடங்களில் ஓட்டைகள் இல்லாமல் இல்லை. இயல்பு மீறிய நடப்புகளை தம் வசதிக்காக (மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று) லாவகமாக இணைத்து முயற்சி செய்தாலும் கதையுடன் அந்நிகழ்வுகள் ஒட்டாமல் பிரிவது ஒரு சிறு தொய்வையும் ஏற்படுத்துகிறது.  பக்பக்கென்று மன நோயாளி போல் பேசும் விக்ரம், சாகும் தருவாயில் பயம் போக்கப் பாடும் ஐஸ்வர்யா என்ற சினிமா பூச்சுக்கள் சுதந்திரப் போராட்டகால சினிமாவை நினைவுறுத்துகிறது.

பாத்திரப் படைப்பில் இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் செய்திருக்கலாம் என்று நான் எண்ணினேன். விக்ரம் பாத்திரப் படைப்பு மனதில் ஒட்டாமலேயே இருந்தது. ப்ருத்வி ராஜ் தோற்றம் ஒரு பெண்மைத் தனத்தைக் காட்டியது. ஐஸ்வர்யா ராய் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் ஏன் நடிக்கிறோம் என்று அவருக்கே தெரியாத மாதிரி சில நேரங்களில் தெரிகிறார்.

பிரமிப்பு என்ற ஒரு யுக்தியின் மூலம், காட்சிப் ப்ரயோகம் செய்வது பார்வையாளர்களை கொஞ்சம் திகைப்பில் ஆழ்த்தினாலும், கதையின் பாங்கு கொஞ்சம் வெற்றிடத்தையும் தொய்வையும் காட்டுகிறது.

ரஹ்மானின் இசை நன்றாகவே இருந்தது. கள்வரே பாடல் அருமை. படமாக்கிய விதம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

ராவணன், ஏன் அப்படி வாழ்ந்தான் என்று தெரிந்து கொள்ளும் நியாயத்தை தெரிந்து கொள்ளாத போலிஸின் வெறி.  ஒரு அதிகாரியின் மனைவியை கடத்தி வந்தமைக்காக கடைசியில் ராவணன் தன்னைக் காப்பாற்றியவன் என்று தெரிந்த பின்னும், கொல்லப்படும் போது குறி பார்த்து சுடும் ஒரு குண்டு இதயத்தில் பாய்ந்தால் போதாதா?  நம்ம சினிமாக்காரர்களுக்கு அப்போது தெறிக்கும் ரத்தத்தை ஐஸ்வர்யா முகத்தில் பட வைக்கத் தெரியாதா?
ராவணனை சிறு பிள்ளைகள் பொட்டு வெடி துப்பாக்கி வைத்து தீபாவளி அன்று சுடுவது போல் ஏன் மணி ரத்னம் சுட வைத்தார் என்று தெரியவில்லை. அப்பட்டமான சினிமாத்தனமாய் சிறுபிள்ளைத்தனமாய் இருந்தது.

அதீத மெல்லசைவான (HIGH RATE SLOW MOTION) யுக்தியில்  திரைச்சுருளை ஓட்டி, நடிகர்களின் நடிப்பாலும், தன் காட்சி கோர்ப்பாலும் (MONTAGE) கடைசியில் உணர்வுகளை பரிமாறும் இடம் மனதில் தாக்கம் ஏற்படுத்தியது.

கையால் தொடாமல் ரத்தத்தின் மூலம் தன் காதலியைத் தொட்டுவிட்டு, கைகளை விரித்து தொட முயன்றவாறே, ஒரு பெரும் பள்ளத்தாக்கில் விழும் ராவணன்....

இன்னொருவன் மனைவியின் மீது வரும் அந்தக் காதல் கொச்சைப்படுத்தப் படாமல் அப்படியே போய் விட்டால் நல்லது என்று ராவணனை மட்டும் பள்ளத்தில் தள்ளிவிட்டு அப்படியே ப்ரமிப்புடன் திரையை இருட்டாக்கி மக்களை வெளியே அனுப்பிவிட்டார் மணிரத்னம்.

வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்று முயலும் ரகத்தில் மணிரத்னம்
குழுவினர்  எப்போதும் போல முயன்றதும் திரைப்படக் கலையின் மெருகுகளை கவனத்துடன் தர
முயன்று  வெற்றியும் பெற்றதற்கு பாராட்டினாலும், வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படம் என்ற அடிப்படையில், சில உள்ளங்களின் நல்ல ரசனையின் உதவியில், படைப்பாற்றலின் பக்க பலத்தில் தமிழ் திரையில் ஒரு வண்ணம் கூடப் பூசிய மசாலாவாகத்தான் ராவணன் தெரிகின்றான்.

Sunday, May 30, 2010

ஒரு இயக்குனரின் பிறப்பு...

உண்மையில் சொல்லப் போனால் நீங்களும் ஒரு இயக்குனரே! வாழ்வின் செயல்பாடுகளை செவ்வனே செய்யும் போது ஒரு நல்ல இயக்குனராகுகின்றீர்கள். அதே செயல் திறனை கற்பனையுடன் கலந்து, சினிமா என்ற ஒரு சாதனத்தின் சில வழிமுறைகளைக் கற்றுக் கொண்டால், வள்ளுவர் வாக்குப் படி "கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்ற பாங்கில் திரைப்பட இயக்குனராய் பவணி வரலாம்.

கம்ப சூத்திரம் கற்க இயலாதது இல்லை. முயற்சிதான் முக்கியம். இயக்குனராய் நாம் யார் வேண்டுமானாலும் எதையும் இயக்கலாம். ஆங்கிலத்தில் இயக்கம் என்பதை மூவ்மெண்ட் (movement) என்று சொல்லுவார்கள் அல்லவா? அதே பொருள்தான் இயக்குனரின் தொழிலும்.
ஒரு கதையின் நிகழ்வை சாதுர்யமாக காண்பவரின் ரசனையைத் தொடுமளவு எப்படி அவரால் இயக்க முடியும் என்பதே இயக்கம்.

உதாரணமா ஓர் காட்சி. நீங்க  ஒரு விசயத்தை பொய் சொல்லி மறைக்கப் பாக்கிறீங்கன்னு வச்சுக்குங்க. நீங்க என்ன செய்றீங்க?

ஒத்திகை பார்த்து சில சமயம் எதிர்பாராத திருப்பம் வரும்  போது லாவகமா சிந்திக்கிறீங்க, அதுக்கு ஏத்த மாதிரி இயங்குறீங்க அல்லவா அது ஒரு இயக்குனரின் தொழில் என்று வைத்துப் பார்க்கலாம். இது ஒரு அடிப்படை.

கொஞ்சம் மாற்றி, அணுகுமுறை என்ற விதிப்படி, கற்றல் அவசியம். ஒரு ஆர்வ அடிப்படை காதல்!

முக்கியமான விசயம் இயக்குனருக்கு சினிமாவின் உள்ளே இயங்கும் பலதரப்பட்ட தொழில் நுட்பங்கள், கலைகள் போன்றவற்றை ஒரளவேனும் அறிந்து கொள்ளும் அவசியமும், இந்த இத்யாதிகளை கையாள்கின்ற நேர்த்தியும் மிக அவசியமாகிறது.

ஒரு கதையை கேட்கும் போது நம் மனதினுள் நாமே ஒரு காட்சியை உருவாக்கிக் காண்கிறோம். கதை சொல்பவர் அதற்கிடையே அவரது கற்பனை வளம், மற்றும் சங்கீத ஞானம் போன்றவற்றின் அடிப்படையில் கதை சொல்லச் சொல்ல, நமது ஆர்வம் அதிகமாகும் தன்மை போல் இயக்குனர், ஒரு கதையை தனது பங்காளிகளான தொழில் நுட்பக் கலைஞர்களுடனும், பல கலைத்துறையின் ஆர்விகளுடனும் நிஜமாய் நடப்பது போல் உருவாக்க முயல்கிறார்.

கதை உயிர் பெற்று சினிமாவின் வழியே தத்ரூபமாக காட்சி தருகிறது. கதையின் அமைப்பு, காலகட்டம், நிகழ்வின் தண்மை போன்றவை இயக்குனரின் பார்வையில் தனித்தண்மை பெற்று பல கலைகளின் உதவியுடன் ஒரு இரு பரிமாணத் திரையில் முப்பரிமாண வாழ்வு போல் நம் உள்ளத்தில் ஏற்படுத்தும் ஒரு கிரியைதான் சினிமா.

எத்தனையோ வருடங்கள் நடந்த ஒரு விடயத்தை அல்லது ஒரு மணித்துளி மட்டும் நடக்கும் ஒரு விடயத்தை திரைக்கதையின் (Screen Play), வாயிலாய் சிந்தையைக் கவரும் வகையில் படமாக்கலாம்.

இயக்குனர் ஆகும் போதே, தனக்கு என்று ஒரு தனித்தண்மையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் இயக்குனர்களுக்கு வேண்டும். (School of thought), சார்பு வழிப் பயிற்சி என்ற அடிப்படையில் ஒருவரிடம் உதவியாளராய் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் அவரது குருவின் சிந்தனை வழியைப் பின்பற்றி விடுதல் இயல்பு எனினும், சுயமாய் சிந்தித்து வித்தியாசத்தைக் காட்டும் சிறப்பு இயக்குனராய் வரவேண்டும் என்று கருவில் இருக்கும் சிசுவாய் இருக்கும் புது இயக்குனர்களுக்கு பொருந்த வேண்டும்.

எல்லாருக்கும் எல்லாவற்றையும் செய்யும் பாங்கு அமைவது கடினம். என்னடா இவன், நீங்களும் இயக்குனர்தான் என்று சொல்கிறானே அது எப்படிச் சரியாகும் என்று ஒரு தாழ்வு மனப்பாண்மையுடன் உங்களைப் பார்க்க வேண்டாம். உண்மையில் முயற்சி திருவிணையாக்கும் என்ற சொல் எக்காலத்திற்கும் உரியது. நம்மில் பலர் முயல்வதை விட்டுவிட்டு, குறை சொல்வதற்கெனவே பிறந்திருக்கிறோம். ஆனால் ஒரு இயக்குனரின் பிறப்பு நல்ல முயற்சியில் அமைவதே.

நிறையப் படியுங்கள். புத்தகம் படிக்கவில்லை என்றால் வாழ்க்கையைப் படியுங்கள். ஒரு நிகழ்வின் தாக்கம் மனநிலையை எப்படிப் பாதிக்கிறது என்ற பக்குவத்தை உணர்வு பூர்வமாக உணருங்கள். எழுதிப் பழகுங்கள்.
ஒரு சாதாரண வீடியோ கேமராவை வைத்து ஒரு சிறு நிகழ்வையோ கதையையோ படமாக்குங்கள்.  வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுங்கள். உதாரணத்திற்கு, இசையில் ஆர்வம் உள்ள நண்பர், நடிப்பதில் ஆர்வம் உள்ளவர், கலையில் ஆர்வம் உள்ளவர், படத்தொகுப்பில் ஆர்வம் உள்ளவர் என மற்றவர் உதவியுடன் அக்கதையையோ நிகழ்வையோ மனதில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் படமாக்க முயலும் முதல் முயற்சி நீங்கள் ஒரு இயக்குனராய்ப் பிறக்க வழி செய்யும்.

அத் திரை முயற்சியை எல்லாருக்கும் காட்டி அவர்களின் மனதில் எந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்று அறியுங்கள். அதன் மூலமே நீங்கள் உங்களின் செயல்திறனை மதிப்பிட முடியும். யாராவது சரியில்லை என்றாலும், உங்களுக்கே சரியாய் வரவில்லை எனத் தோன்றினாலும் மறுபடியும் முயலுங்கள்.

ஒரு இயக்குனர் முயற்சியில்தான் உருவாகுகிறார். ஒரு சாதாரண மனிதன் இயக்குனராய்ப் பிறக்க ரசனையும் பயிற்சியுமே தேவை!

ரெடி, ஸ்டார்ட் கேமரா, ஆக் ஷன், டேக் ஓகே என்று நீங்கள் சொல்லும் காலம் விரைவிலேயே வரலாம்.